பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பொருட்கள் வாங்கிய கர்ப்பிணிக்கு பிணை!
பிறக்கவிருக்கும் தனது பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய கர்ப்பிணி தாயொருவர் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கரையோர பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரவல் வாங்கிய தங்க சங்கிலி அடவு
திருணம் வைபவமொன்றுக்கு அணிந்து சென்று மீண்டும் கொண்டுவந்து தருகின்றேன் என அந்த கர்ப்பிணி தாய், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் சுமார் ஒன்றரை இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியை இரவல் வாங்கியுள்ளார்.
அந்த தங்க சங்கிலியை அடகுவைத்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை கர்ப்பிணி கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தங்கசங்கிலியை இரவல் கொடுத்த பெண், கரையோர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபரை தேடிச் சென்றபோது,
“பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருமாறு வைத்தியசாலையில் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதனை வாங்க தேவையான பணம் இல்லை என்பதனால் , இரவல் வாங்கிய தங்கநகையை அடகுவைத்து, பொருட்களை கொள்வனவு செய்ததாக அப்பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் முயன்றபோது. பிரசவத்துக்கு நாள் நெருங்கி இருந்தமையால், அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.
அதனடிப்படையில், பொரளை சீமாட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த பதில் நீதவான், அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு, அவரை சரீர பிணையில் விடுதலைச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.