இலங்கையில் கிறிஸ்துவ ஆலயமொன்றில் கொண்டாடப்பட்ட தமிழர் பண்டிகை!
தலைமன்னாரில் உள்ள புனித லோறன்சியார் ஆலயத்தில் தமிழர்களின் பொங்கல் பண்டிகை இன்றைய தினம் (15-01-2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள் மற்றும் 07 வலய உறுப்பினர்களிடம் கையளித்தார்.
குறித்த இளைஞர்கள் நேற்று (14-01-2024) மாலையில் இருந்தே ஆலயத்தில் பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆலய வளாகத்தை வாழை, கரும்பு, கோலங்கள் ஏனைய சோடினைகள் மூலம் அலங்கரித்தனர்.
07 வலயங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடங்களில் பொங்கல் பொங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
காலைத் திருப்பலியை அருட்பணி மாக்கஸ் அடிகளார் தலைமன்னார் மக்களுக்கு நிகழ்த்தினார்.
தொடர்ந்து இளைஞர்கள் தாம் பொங்கிய பொங்கலை இறைவனுக்கு காணிக்கையாக்கினர்.
திருப்பலியின் நிறைவில் அனைத்து வலயங்களும் தமது வலய உறுப்பினர்களுக்கு பொங்கலை வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.