அவதூறாக பேசிய பொலிஸ் சார்ஜன்; மன்னிப்பு வழங்கிய தேரர்
காத்தான்குடியில் , பலாங்கொட ஸ்ரீ சுதர்ம ராம விகாரையின் விஹாராதிபதியும், மனிதநேய செயற்பாட்டாளருமான பொகவந்தலாக ராகுல தேரர் பொலிஸ் சார்ஜனுக்கு மன்னிப்பு வழங்கினார்.
காத்தான்குடி கடற்கரை வீதியில் குறித்த பௌத்த மதத் தலைவர் உணவு விடுதியொன்றில் உரையாடிக் கொண்டிருந்தபோது மேற்படி பொலிஸ் சார்ஜன், பௌத்த மதத் தலைவரின் மீது அவதூறான வார்த்தைகளை பேசி அவரை சிரமத்திற்கு உட்படுத்தினார்.
ராகுல தேரரிடம் மன்னிப்பு
சம்பவம் தொடர்பில் பௌத்த மதத் தலைவர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்த நிலையில் பொலிஸ் சார்ஜன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன் பொகவந்தலாக ராகுல தேரரிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.