ரோஸ் டே கொண்டாடிய ஜோடியை தேடி வந்த காவல்துறை ; காதல் சொன்ன காணொளியால் வந்த சிக்கல்
இந்தியாவின் பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் 'ரோஸ் டே' (Rose Day) கொண்டாட்டத்தின் போது, மதுபான போத்தல்களுடன் காணொளி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காஞ்சன் தேவி என்ற பெண், தனது கணவருக்கு ரோஜாப் பூவை வழங்கி, பின்னர் ஒரு கிளாஸில் மதுவை ஊற்றி அவரிடம் கொடுப்பது போன்ற காணொளியை பதிவிட்டிருந்தார்.
பீகாரில் மதுபானத்திற்கு கடுமையான தடை உள்ள நிலையில், இந்த காணொளி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேவேளை, குறித்த பெண் பியூட்டி பார்லர் ஒன்றில் கைத்துப்பாக்கியுடன் (Pistol) போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் இந்த காணொளி பரவியதை அடுத்து, முங்கர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சையத் இம்ரான் மசூத் தலைமையிலான விசேட குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர்.
விசாரணையில் அந்தத் துப்பாக்கி விஷால் குமார் என்பவருக்குச் சொந்தமான அனுமதிப்பத்திரம் பெற்ற துப்பாக்கி எனத் தெரியவந்தது.
எனினும், சட்டப்படி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் துப்பாக்கியை வழங்குவதும், அதனை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்துவதும் குற்றமாகும்.
பொது இடங்களில் ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதும், தடைசெய்யப்பட்ட மதுபானங்களை ஊக்குவிப்பதும் பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்த காவல்துறையினர், காஞ்சன் தேவி மற்றும் துப்பாக்கியின் உரிமையாளர் விஷால் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.