10 வயது லோகிதனை தேடும் பொலிஸார் ; பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) நேற்று மாலை காணாமற் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் வெளிநாட்டில்
பதுளை - ஹாலி எல்ல திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவனின் தாய் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகும் நிலையில், தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனது ஒரே மகனை இராகலை உயர் நிலை பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றும் ஆச்சியின் அரவணைப்பில் விட்டுள்ளனர். காணாமற் போன தினத்தன்று சிறுவன் மாலை 05 மணிக்கு தான் வழமையாக செல்லும் பிரத்தியோக வகுப்புக்கு சென்றுள்ளார்.
எனினும் இரவாகியும் சிறுவன் வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் ஆச்சி தேடுதலில் ஈடுப்பட்டதுடன் சிறுவன் காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற நீட்ட டெனிம் காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.