18 ஆண்டுகள் நீண்ட வழக்கு ; களுத்துறை சூட்டிக்கு தூக்கு தண்டனை!
பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில், நான்காவது பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த நேற்றையதினம் புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.
18 ஆண்டுகள் நீண்ட இந்த வழக்கு விசாரணையின் முடிவில், மற்ற மூன்று பிரதிவாதிகளையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மூன்று பெண்களுக்கு எதிராக வழக்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பத்தேகம, காமிங்கல பகுதியைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன (என்கிற) 'களுத்துறை சூட்டி' என்பவராவார்.
இவர் இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதியாவார். வழக்கின் முதல் பிரதிவாதியான ஹப்புகலகே நிலந்தி, இரண்டாவது பிரதிவாதியான குநெத்திகொட லீலாவதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மூன்றாவது பிரதிவாதியான ரணசிங்க பத்திரனகே பியந்தி ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய ஒரு தினத்தில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க (15615) மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஜகத் நந்தன (50472) ஆகிய இருவரும் காமிங்கல பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பலபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த திலீப் குமாரசிங்க உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களுக்கு எதிராகப் பத்தேகம பொலிஸஸாரால் பலபிட்டிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அரசாங்க சட்டத்தரணி செனூரி குணதிலக்க இந்த வழக்கை வழிநடத்தியதுடன், பத்தேகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உடுகமசூரிய விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்.