வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணுக்கு காத்திருந்த துயரம்; பொலிஸ் தலைமையகத்தில் விபரீத முடிவு
குருநாகல் பொலிஸ் தலைமையகத்தில் குடும்பத் தகராறு ஒன்றுக்கு தீர்வு காண வந்த பெண்ணொருவர் விஷமருந்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறைப்பாடு ஒன்று தொடர்பில் நேற்றைய தினம் விசாரணை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இந் நிலையில் கணவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த பெண் விஷம் அருந்தியுள்ளார்.
குருநாகல் ஹிந்தகொல்ல தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விஷம் உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடொன்றில் பணிபுரிந்த குறித்த பெண் தான் வசிக்கும் வீட்டின் எஞ்சிய கட்டுமானப் பணிகளுக்காக சம்பள பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பெண் வழங்கிய முறைப்பாடு
"வீடு கட்டும் பணியை செய்யாமல் மது அருந்தவும், பெண்களுடன் பழகவும் கணவன் அதனை செலவிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி வீட்டில் ஒரு பெண் ஒருவருடன் வாழ்ந்து மனைவி அனுப்பிய பணத்தையும் செலவு செய்துள்ளார்".
நாடு திரும்பியுள்ள குறித்த பெண், தான் சம்பாதித்து வீடு கட்டுவதற்காக அனுப்பிய பணத்தை அழித்தது மட்டுமன்றி கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதனை கண்டு குருநாகல் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனால் அப் பெண் கணவருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் மனைவி மற்றும் கணவன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டபோது அவர் தனது கணவரின் முன்னிலையில் விஷ குப்பியை எடுத்து குடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.