மகிந்தானந்த அளுத்கமகே மீது பிரதமர் கடும் சினம்!
சீன உரம் குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துக்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் மகிந்த தொலைபேசியில் அமைச்சரை தொடர்புகொண்டு கடுமையாக சாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் உரங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ சீன தூதுவரிடம் தெரிவித்தார் என அமைச்சர் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.
இதனை அறிந்த பிரதமர் அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடுமையாக சாடியுள்ளதுடன், யார் இந்த தகவலை தெரிவித்தது என அமைச்சரிடம் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு அமைச்சர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளாத நிலையில் இவ்வாறான கருத்துக்களை ஊடகங்களிற்கு வெளியிடுவதற்கான அதிகாரங்களை யார் வழங்கியது எனவும் பிரதமர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இவ்வாறான அறிக்கைகள் நாடுகளிற்கு இடையிலான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள பிரதமர் எதிர்காலத்தில் பிரதமர் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் தன்னை தொடர்புகொண்டு விளக்கங்களை பெறுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.