ஆடை உற்பத்தி தொழிசாலைகளில் பெண்களுக்கு உடல், உள துன்புறுத்தல்
நாட்டில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டன.

பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள்
வேலைத்தளங்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்பில் பாரிய அளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை என வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் தலைவி சுவஸ்திகா அருலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக பெருந்தோட்டதுறைகளிலும், ஆடைத் தொழிற்துறையிலும் ஈடுபடும் பெண்கள் சொல்ல முடியாதளவு துன்பங்களை அனுபவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் குறித்து, ஏற்றுமதி நிறுவனங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் சுவஸ்திகா அருலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆடைத்தொழில் துறை உள்ளிட்ட ஏற்றுமதி துறையை சார்ந்த தொழில் தருநர்கள், தொழிலாளர்களின் நலன்கருதி செயற்பட வேண்டும் எனவும் சுவஸ்திகா அருலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.