லண்டன் வாழ் தமிழ் யுவதிகள், குடும்பப் பெண்களே அவதானம்; இப்படியும் நடக்கிறது!
லண்டனில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த இந்தியர் 37 வயதுடைய குருவிந்தர் சிங் குற்றவாளியாகக் இனம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சந்தேக நபர் மீது வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேடிங்டன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை
பாதிக்கப்பட்ட பெண் பராமரிப்புப் பணி (caregiver) தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் பெயரில் இருந்த வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கு மூலம் குருவிந்தர் சிங்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தன்னை ஒரு பெண் என நம்ப வைத்துப் பேசிய சிங், யுவதியின் கடவுச்சீட்டு விவரங்களைப் பெற்றுக்கொண்டார். காயமடைந்த ஒரு விளையாட்டு வீரரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி யுவதியை ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு சென்ற பெண்ணை மிரட்டி, சிங் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய அந்தப் பெண்ணை வீதியில் இருந்த இருவர் மீட்டுப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ர்சியடைந்த பெண் அன்றே போலீசாரிடம் சம்பவம் தொடர்பில் முறையிட்டார். பெண் வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி அன்று அதே ஹோட்டலில் வைத்து சிங் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரான சிங்கிடம் இருந்து 9 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024 டிசம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை சிங் அந்த ஹோட்டலில் 100-க்கும் மேற்பட்ட தடவைகள் அறைகளை முன்பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது பல பெண்களுடன் வாட்ஸ்அப் மூலம் வேலை தருவதாகக் கூறி உரையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹேய்ஸ் அல்லது சவுத்ஹால் பகுதிகளில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் யாராவது இவரால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தகவல் தெரிந்தால் உடனடியாக 101 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.