காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (வெள்ளிக்கிழமை) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கடந்த வருடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.
அதற்கு தீர்வுகள் கிடைக்க பெறாத நிலையில் நேற்றையதினம் கேப்பாபிலவு மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவி செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆவணங்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என கூறியிருந்தனர்.
இதனையடுத்தே இன்றையதினம் கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் ஐனாதிபதி செயலகத்தில் கூறப்பட்ட விடயங்களை கூறி அரச அபரிடம் புதிய மகஜரை கையளித்திருந்தனர்.
இதன்போது முல்லை மாவட்ட அரசஅதிபர் கேப்பாபிலவு காணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரினையும் அதற்கான பதில் கடிதத்தையும் கேப்பாபிலவு மக்களுக்கு காண்பித்து அது தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்.
கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் புதிய மகஜர் ஒன்றினை கையளித்து இருந்தனர்.
அத்தோடு எதிர்வரும் 26 ஜனாதிபதி அனுரகுமார திசாநயாக்கா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வருகைதர இருப்பதனால் அவரிடமும் கேப்பாபிலவு மக்கள் மகஜரினை கையளிக்க இருப்பதும் குறிப்பிடதக்கது.