அர்ச்சுனாவின் பதவி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்தார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா, மருத்துவ சேவையிலிருந்து விலகாமல் தமது வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது அரசியலமைப்பின் படி, சட்டத்திற்கு முரணான சூழ்நிலை என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும், அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் செல்லுபடியாகாது எனவும் தீர்ப்பளிக்குமாறும், மனுதாரர் நீதிமன்றை கோரியுள்ளார்.