இரு வங்கி கணக்கு வைத்திருந்தவர் கைது
சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வங்கிக் கணக்குகளைப் பேணி வந்த நபர் ஒருவரை, பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு
சந்தேகநபர் ஹங்வெல்ல பகுதியிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளின் ஊடாக சுமார் 36,733,034 ரூபா பணத்தைப் புழக்கத்தில் விட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2026.02.02 அன்று சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவராவார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு, அதனைப் பணச் சலவை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (2026.02.03) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.