முன்னாள் தவிசாளர் விதானகே சிறிசோமவின் வீட்டிற்கு மதுபோதையில் அரைகுறையாக வந்த நபரால் பரபரப்பு
ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் விதானகே சிறிசோமவின் வீட்டிற்கு நபர் ஒருவர் மதுபோதையில் நிர்வாணமாக இரும்பு கம்பியுடன் சென்று சேதம் விளைவித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னாள் தவிசாளரின் மகள் மற்றும் சகோதரியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த பல பொருட்களும், வாயிற்கதவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
தாக்குவதற்காக வந்த நபர் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயையும் கொடூரமாக தாக்கியதாக வீட்டு உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாக்குதல்
தாக்குதல் நடத்த வந்த நபர் முன்னாள் தவிசாளரால் மாநகர சபையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அங்கு இடம்பெற்ற சம்பவமொன்றுக்கு பழிவாங்கும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபர் வீதியில் நிர்வாணமாக நடந்து செல்வதை நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
சம்பவத்தையடுத்து உடனடியாக ஹொரணை பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் அவர் இன்று (21) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.