எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட மர்ம நபர்!
மாதிவெல - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டு தொகுதியில் உள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் மர்ம நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த எம்.பி வீட்டிலிருந்து காலையில் வெளியே வந்த போது, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததாக, பொலிஸ் வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்ற கண்காணிப்பாளர் நரேந்திர பெர்னாண்டோவிடம் வினவிய போது, இச்சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரின்வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த இராணுவ அதிகாரிகள் குழுவொன்று அதே வீட்டுத் தொகுதியில் உள்ள வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ அதிகாரிகள் குழு போராட்ட காலத்தின் போது மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டவர்களாவர்.
எனினும், மாதிவெல - எம்.பிக்களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து அந்த இராணுவ அதிகாரிகளை அகற்றுவதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.