பொலிஸ் சேவைக்கு மக்கள் நேரடி மதிப்பீடு ; புதிய QR முறைமை அறிமுகம்
இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சேவைகள் குறித்தும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்காக “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரில் இணையவழி டிஜிட்டல் தளம் (Online Digital Platform) ஒன்றைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் குடிமக்கள் தங்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் அல்லது ஆலோசனைகளை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும் என்றும், அந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மக்களை மையமாகக் கொண்ட, மிகவும் திறமையான பொலிஸ் சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தும் போது: பொதுமக்கள் கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் தங்களின் தனிப்பட்ட விபரங்களையும் இதில் உள்ளடக்க முடியும்.
அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்ததற்கான காரணம், சம்பவம் அல்லது கருத்து குறித்த விபரங்களையும் இந்த அமைப்பில் உள்ளீடு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள E-Services பகுதிக்குச் சென்று, அதன் மூலமாகவும் பொதுமக்கள் இந்த 'Community Feedback Portal' தளத்தை அணுகித் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய இடங்களான வரவேற்புப் பிரிவுகள் மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் இந்த QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்தச் சேவை குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுமாறும் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.