ஜெனீவா தீர்மானத்தை எதிர்த்த பீரிஸ்; ஆணையாளருக்கு வழங்கிய பதில்!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி நாட்டின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப்பொறிமுறைகளால் பயனில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , ஜெனீவாவின் 46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான கருத்துக்கு அமைச்சர் இன்று காணொளி ஊடாக பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவில் எடுத்துரைத்தார்.
அத்துடன் இயலுமானவரை விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்றும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் எனவும் அவர் கூறினார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கை, இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை இழப்பீட்டு அலுவலகம் செயலாக்கியுள்ளதாகவும் , அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.