அரச பேருந்துடன் மோதிய பெக்கோ இயந்திரம் ; பலர் காயம் ; அதிகாலையில் சம்பவம்
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியின் குறுக்கே சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.