இன்று முதல் யாழிற்கு ரயில் சேவைகள் ; மகிச்சியில் பயணிகள்!
வடக்கு ரயில் மார்க்கத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமை போல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை ரயில் மற்றும் யாழ்ப்பாணம் இரவு தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.

"திட்வா" சூறாவளியினால் வடக்கு ரயில் மார்க்கம் 14 இடங்களில் சேதமடைந்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்ட போதிலும், ஜனவரி 19 முதல் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
தற்போது அந்த 14 இடங்களும் நிரந்தரமாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு ரயில் பாதையில் ரயில்கள் வழமையான வேகத்தில் தடையின்றி இயங்கும் எனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.