புத்தாண்டில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்ட தடை ; பறந்த அதிரடி உத்தரவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புக்களை வழங்குவதோ அல்லது அவற்றை சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

நிதியுதவி
புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் அதிகாரிகளிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு உபசரிப்புக்காக ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தலா 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வழங்க பொலிஸ் மா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக, 17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.