நோயாளர்கள் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கின்றனர்; வைத்தியர்கள் எச்சரிக்கை
கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று இலங்கையில் அடுத்து வரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை போராட்டம், நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் தொற்றாளர்கள் நிறைந்து வழியும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாகவும் வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது வெறும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை மோசமடையக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும், ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வைத்திசாலைகளுக்கு செல்ல அஞ்சுவதால் மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது ஒக்சிசன் தேவைப்படும் சகல நோயாளர்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் சமாளிக்கப்படுகின்றபோதிலும் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் இறப்புகளைத் தவிர்க்கமுடியாதெனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் போதுமான கட்டில்கள் இல்லாததால் அடுத்துவரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் 200 மரணங்கள் சம்பவிக்கக்கூடும் எனவும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5,000ஐ எட்டக்கூடும் எனவும் வைத்தியர்கள் கணிப்பிடுகின்றனர்.
தற்போது வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஒரே கட்டிலை 2 முதல் 3 நோயாளிகள்வரை பகிர்வதால் நிலைமை மோசமடையக்கூடும். அதோடு இதனை விட ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாய்களிலும் வைத்திசாலை தாழ்வாரங்களிலும் படுக்க நேரிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இரண்டு நோயாளர்கள் பகிரும் படுக்கைகளில் பல நோயாளர்கள் தங்களது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருப்பதாக வைத்தியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபுறம் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நோயாளர்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கும் உள்ளாவதை அவதானிக்க முடிவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே , உடனடியாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் டெல்டா திரிபு அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்து அழிவை ஏற்படுத்தும் என இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிலைமை நீடித்தால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சுகாதார சேவை சரிந்துவிழக்கூடும் என மற்றும் சில வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்று அலைகளுக்கு எதிராக களநிலைகளிலேயே போராட வேண்டியிருந்தது. ஆனால். தற்போதைய போராட்டம் வைத்திசாலைகளுக்கு நகர்ந்து பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் பேராசிரியர் அகம்போதி கூறினார்.
அத்துடன் சுகாதார சேவைகளில் பணியாற்றுபவர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவுவதால் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இது இலங்கை வைத்தியத்துறையில் அபூர்வமான நிகழ்வு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொற்று நோயாளர்களினது எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் நிலையில் , மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்கும் காத்திரமான கொள்கைகளை அமுல்படுத்தவேண்டும் எனவும் வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.