முல்லைத்தீவு மக்களின் பரிதாபகரமான நிலை!
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதும் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியிலும் காணப்படும் ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் மக்களே இவ்வாறு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அங்கு இரண்டு பொதுக் கிணறுகள் மாத்திரமே குடிநீர் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு கிணறு தற்போதைய வரட்சி காரணமாக நீரின்றி வற்றிப்போய்யுள்ளது. மற்றைய கிணற்றிலிருந்து நாளாந்தம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே பெறக்கூடியதாவே உள்ளது. அதேசமயம் சில வேளைகளில் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று குடிநீர் பெற் வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை விட போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் தமது கிராமத்தில் இருந்து சமுர்த்தி கொடுப்பனவோ மற்றும் பிரதேச செயலக தேவைகளுக்காக செல்வதாக இருந்தால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
தங்களது கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரை சென்று அதன் பின்னர் துணுக்காய் செல்ல வேண்டும் என்றும், இவ்வாறு மூன்று பேருந்துகளில் பயணித்து தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
அதேசமயம் தமது கிராமத்தில் குடிநீரின்மை போக்குவரத்து வசதிகளின்மை காட்டு யானைகளின் தொல்லை என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.