விமானத்தில் பொதி அறையில் ஒழிந்திருந்த பயணியால் ஷாக்!
விமான பயணங்களில் பொதுவாகப் பைகளை வைக்கும் மேலடுக்கு பொதி அறையில், பயணி ஒருவர் தன்னைத்தானே ஒளித்துக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மால்டாவிலிருந்து இத்தாலியின் நேபிள்ஸ் நோக்கிச் சென்ற ரயான்ஏர் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிக்டாக் தளத்தில் 'gaetanino97' என்ற பெயரில் அறியப்படும் ஒரு உள்ளடக்க உருவாக்குநரே (Content Creator) இந்த விசித்திரச் செயலைச் செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கண்டனம்
தான் நேபிள்ஸ் செல்வதற்கான திரும்பும் கட்டணத்தைச் செலுத்த விரும்பாததாலேயே இவ்வாறு செய்ததாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்தப் பொதி அறையினுள் படுத்துக்கொண்டு 'நேப்போலி' என உரக்கக் கத்துவதை ஏனைய பயணிகள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
வானூர்தியில் ஏறுவதற்கு ஏற்கனவே பயணச்சீட்டு எடுத்திருக்க வேண்டும் என்பதால், கட்டணத்தைத் தவிர்க்க இவ்வாறு செய்ததாக அவர் கூறுவது ஒரு விளம்பர உத்தியே என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பயணி ஏற்கனவே வானூர்தி நிலையங்களில் கூச்சலிடுவது, பொது இடங்களில் இடையூறு விளைவிப்பது போன்ற பல சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்டு வருபவர்.
இந்தச் செயல் பாதுகாப்பு விதிமீறல் என்றும், இவரை 'பறக்கத் தடை விதிக்கப்பட்டோர்' (No-fly list) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.