மார்ச் இறுதிவரை வான் பரப்பை மூடும் பாகிஸ்தான்; பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ள விமான நிறுவனங்கள்
பாகிஸ்தான் தனது வான்பரப்பை மார்ச் மாதம் இறுதி வரை பகுதி அளவில் மூடுவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக வான் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள பாரிய தடைகளை அடுத்து, வர்த்தக ரீதியிலான வானூர்தி பயணங்களுக்காக வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

150க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்தி பயணங்கள் ஏற்கனவே ரத்து
பாகிஸ்தான் நகரங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான 150க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்தி பயணங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
கராச்சி மற்றும் லாகூர் ஆகிய வான் தகவல் பிராந்தியங்களில் தெரிவு செய்யப்பட்ட வான் பாதைகள் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்பாட்டு ரீதியான காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானூர்தி நிலைய அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள் காரணமாக சர்வதேச வானூர்தி போக்குவரத்துக்கள் ஏற்கனவே மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு விமான பயணங்களில் மேலதிக தாமதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.