யாழில் மருத்துவ கழிவுகள் எரியூட்டிக்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் - கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் நச்சு புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, துர்நாற்றம் வீசுவதால் அயலில் வசிக்கும் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
சுவாசப் பிரச்சினை, துர்நாற்றம்
இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் , எரியூட்டி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்து வைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.