உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதைவிடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று Guruge Nature Park கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டே நாட்டிற்காக ஒன்றுபட வேண்டிய இடத்தில் ஒன்றுபடுவதும், இணைந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் இணைந்து பணியாற்றுவதும் முக்கியமானதாக அமைந்து காணப்படுகின்றன.
ஐந்தரை வருடங்களே ஆன ஐக்கிய மக்கள் சக்தி தற்போது 1773 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 39 உள்ளூராட்சி தவிசாளர்களையும், 21 பிரதித் தவிசாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களில் 100 க்கும் மேற்பட்டவற்றின் தவிசாளர் பதவி எதிர்க்கட்சிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பதவியையும், நாடாளுமன்ற பெலும்பான்மை, பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் அரசாங்கத்திடம் இருக்கும் போது, இன்று அரசாளுகை இயலாமையால் வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசாங்கம் முழு சமூகத்தையும் ஏமாற்றியுள்ளது.
ஏப்ரல் மாதம் ஆகும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சுபசெய்தியொன்றைச் சொல்வோம் என்று அரசாங்கம் ஏலவே தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த சுப செய்தி வெளிவரவில்லை.
தற்போதைய அரசாங்கம் முழு கத்தோலிக்க சமூகத்தையுமே ஏமாற்றியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை இந்த அரசாங்கமும் மறைப்பது பெரும் பிரச்சினையையாக காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முழு சமூகமும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது. நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படவில்லை. சட்டத்தின் ஆட்சி காணப்படுவதாக புலப்படவில்லை. தலைதூக்கியுள்ள இந்த கொலை கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாடாக நாம் 2028 ஆம் ஆண்டுக்கு நமது கடனை திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இந்த வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த நமக்கு அதிக அளவிலான டொலர் கையிருப்பு காணப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றாலும், இந்த அரசாங்கத்திடம் அதற்கான திட்டம் எதுவும் இல்லை.
வெளிநாட்டுக் கடன்களை செலுத்த முடியாவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்தடையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.