பெண் காசாளர் மீது துப்பாக்கிச்சூடு ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெல வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த வருடம் நவம்பர் (17) இரவு 8.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இருவர் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் படுகாயமடைந்த 48 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்ற உணவகத்தில் காசாளராகக் குறித்த பெண் பணியாற்றி வந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்தோடு, கந்தர மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தால் பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோருகின்றனர். படத்தில் உள்ள சந்தேகநபர் உபுல் குமார எனும் ஜம்பு என்பவராவார்.
39 வயதுடைய 871254385V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவராவதோடு, உடுமுல்ல ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறியக்கிடைக்கும் பட்சத்தில் மீட்டியாகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591481 மற்றும் பொலிஸ் நிலையம் 0912260423 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.