வரலாறு காணாத உச்சத்தில் எண்ணெய் விலை ; உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் போர் பதற்றம்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் யுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஐரோப்பிய மற்றும் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 150 டொலர் வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானினால் ஹோர்முஸ் நீரிணை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 12 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது உலகளாவிய மொத்த விநியோகத்தில் சுமார் 12 சதவீதமாகும். இந்த பாரிய விநியோகத் தடையே விலையேற்றத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த மாதத்தில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலையானது ஒரு பீப்பாய்க்கு 119.50 டொலராக உயர்ந்தது.
இது 2022ஆம் ஆண்டிற்குப் பின்னரான அதிகப்படியான விலையாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், 2008ஆம் ஆண்டில் பதிவான 147.50 டொலர் என்ற சாதனையை விட இது குறைவாக இருந்தபோதிலும், தற்போதைய உடனடித் தேவைகளுக்கான மசகு எண்ணெய் விலையானது 150 டொலரைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து தடைப்பட்டுள்ள எண்ணெய் விநியோகத்திற்குப் பதிலாக, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்ள ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
இதனால் உலக சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி சடுதியாக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடிக்குமாயின், மசகு எண்ணெய் விலையானது மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.