நுவரெலியாவில் வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நேற்று (26) இரவு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முழுமையாக தடையேற்பட்டிருந்ததாகத் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குறித்த வீதியூடனான போக்குவரத்து சீரானதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் அறிவுறுத்தல்
நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றினர்.
அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்தபோது நுவரெலியா பதுளை பிரதான வீதியில் வாகனம் எதுவும் செல்லாததால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதனால் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியை பயன்படுத்தி கடும் சிரமத்துக்கு ஆளாகினர். நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.
இதனால் வாகனங்களை பழமையான மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா பேருந்து தரிப்பிடம் முதல் பதுளை மற்றும் கண்டி செல்லும் பிரதான வீதியில் 50 இற்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளது.
எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன சாரதிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.