வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாட்டை விட்டு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் காலநிலையின் தாக்கம் இன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை
இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.