ஆட்பதிவு திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை விநியோகிப்பதற்கான ஒரு நாள் சேவை ,வரும் 25 ஆம் திக முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான ஒரு நாள் சேவை மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த சேவை பெறுனர்களுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரே சந்தர்ப்பத்தில் பெருமளவான மக்கள் சேவையைப் பெறுவதற்காக ஒன்று கூடுவது அபாயம் மிக்கது என்பதால் , மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவை பெறுனர்களை பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கும் , காலி தென் மாகாண அலுவலகத்தில் இந்த ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள சேவை பெறுனர்கள் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்படிவத்தை குறித்த பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலக அடையாள அட்டை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் இதன் போது தமக்கு வருகை தருவதற்கு உகந்த நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதற்கமைய குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும்.
அவ்வாறின்றி குறித்த தினத்தில் வருகை தர முடியாவிட்டால் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று மீண்டுமொரு நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.
தற்போது சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான இலக்கத்தை பெற்றுக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.