தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் சிங்கள மொழியில் மட்டும் அறிவிப்பு பலகை!
இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களில் நுவரெலியா பிரதேசமும் ஒன்றாகும். தமிழ் மொழிபேசும் மக்கள் அதிகம் வாழும் நுவரெலியாவிற்கு இங்கு அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தருகின்றனர்.
எனினும் நுவரெலியா பிரதான நகரில் நுவரெலியா – பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் அபராதம்
நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தூரப் பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போக்குவரத்து பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்படுவதால் சாரதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.