எதையும் நிவர்த்தி செய்யவில்லை ; வீதிக்கு இறங்கிய யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்கள்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது.
நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சாராப்பிட்டி கிணற்று நீரையே குடிநீருக்காக நம்பி இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மற்றும் 5 அமைச்சுக்கள், வடமாகாண ஆளுநர் மகஜர்
ஆனால் அதிகளவான நீரை கடற்படையினரும் பயன்படுத்துவதால், தற்போது கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது. போக்குவரத்து பிரச்சினை காணப்படுகின்றன,
கடல் வழி பயணத்திற்காக 3 கடற்கலன்கள் அதாவது படகுகள் பயன்படுத்தப்படுகின்றன, இங்கு போதியளவு தனியார் படகுகளும் இல்லை, நாளாந்தம் பயணங்களை மேற்கொள்ளும் பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
சுற்றுலா துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நெடுந்தீவிற்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து சீரின்மையால், குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்தே திரும்பி விடுகின்றார்கள்.
அதே போன்றே தரை வழிப் போக்குவரத்தும் பெரும் சவாலாக காணப்படுகின்றன. தற்போது பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீதிகள் பல குன்றும் குழியுமாக காணப்படுகின்றன.
பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றன. அவை நிவர்த்தி செய்யப்படவில்லை. பல முறை பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் கல்வி திணைக்களம் மற்றும் அமைச்சுக்களுடன் கலந்துரையாடிய போதும் அக்கறை காட்டவில்லை. சுகாதார பிரச்சினைகள் அதிகளவாக காணப்படுகின்றன.
வைத்தியசாலையில் குறைபாடுகள் நிலவுகின்றன. நிரந்தர மருத்துவ கலவையாளர் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் முழுமையாக இயக்குவதில்லை. 2 மணிக்கு பின்னர் வைத்தியசாலை இயங்குவதில்லை.
பொது வைத்திய நிபுணர் மற்றும் வைத்தியசாலை செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. குறித்த அத்தியாவசிய சுகாதார தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்று கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஜனாதிபதி மற்றும் 5 அமைச்சுக்கள், வடமாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களுக்கான நெடுந்தீவு மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.