இலங்கை பிரதமர் அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் உள்ள எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (30-01-2023) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான தீர்மானங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மட்டுமே, அரசு நிறுவனத்தை மூடுவது அல்லது முதலீட்டுக்குச் செல்வது அல்லது நிர்வாகத்தை மட்டும் ஒப்படைப்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் பெரிய மாற்றங்களைச் செய்யாமல் தினசரி வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நிறுவனங்கள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக விவாதிக்கப்பட்டு அமைச்சகங்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மறுசீரமைக்கப்படவுள்ள நிறுவனங்களை இலாபமாக மாற்றுவது இலக்குகளில் ஒன்று எனவும், தனது முன்மொழிவுகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.