அபாய கட்டத்தில் நொச்சிகுளம் கிராமம்!
சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்ற ஓமந்தை, நொச்சிகுளம் கிராமத்தில் கொவிட் தொற்றாளர்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அபாய நிலையில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கொவிட் தொற்றாளர்களாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் மேலும் 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் கொவிட் அச்சுறுத்தல் மிக்கதாக குறித்த கிராமம் மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.