2027 வரை எந்த கொடுப்பனவும் கிடையாது ; ஜனாதிபதி திட்டவட்டம்!
அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (6) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தவறு செய்பவர்களுக்கு மட்டுமே வலி இருக்கும்
கண்டி மாவட்டத்தில் டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் திட்டத்தின் கீழ், மத்திய மாகாண சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
2025 ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபாயும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 11,000 கோடி ரூபாயும், 2027 ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியாக 11,000 கோடி ரூபாயும் வேதன உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் அடிப்படை வேதன உயர்வுக்கு மட்டுமே அரசாங்கம் 33,000 கோடி ரூபாயை செலவிடவுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வேதன உயர்வுக்காக ஒதுக்கியுள்ள நிலையில், மீண்டும் வேறு கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி சிலர் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்
. யார், எப்படி ஆர்ப்பாட்டம் செய்தாலும், 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது கட் வேதன உயர்வு கிடைக்கும் வரை எவ்வித கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட மாட்டாது என கூறினார். இயற்கை அனர்த்தத்தினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனப் பலர் கருதினர்.
ஆனால், இரண்டு மாதங்களுக்குள் மின்சாரம், வீதிகள் மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றை வழமைக்குக் கொண்டு வந்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும் புதிய சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும். பணச் சலவையைத் தடுப்பதற்காக சர்வதேச தரத்திலான சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. "நாட்டில் சட்டத்திற்கென ஒரு கோடு உள்ளது.
அதற்கு மேலே யாரும் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழேயே இருக்க வேண்டும். நாங்கள் முன்னெடுக்கும் இந்த மாற்றம் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம், ஆனால் தவறு செய்பவர்களுக்கு மட்டுமே அந்த வலி இருக்கும் எனவும் ஜனாதிபதி அனுர இதன்போது மேலும் தெரிவித்தார்.