O/Lமேலதிக வகுப்புகள் நடத்த தடை
எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2025) மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமையப்பெற்றள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை தொடர்பான முறைகேடுகள்
பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் முதல் பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்,
பாடங்கள் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் வழிகாட்டல்களை நடத்துதல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், வினாக்கள் முன்கூட்டியே வழங்கப்படும் எனச் சுவரொட்டிகள்,
பதாகைகள் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் என்பனத் தடைசெய்யப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறிச் செயல்படும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
பரீட்சை தொடர்பான முறைகேடுகள் அல்லது விதிகளை மீறுவோர் குறித்து பரீட்சைத் திணைக்கள அவசர இலக்கம் - 1911 மற்றும் காவல்துறை தலைமையகம்- 011 242 1111 என்பவற்றுக்கு அறிவிக்கமுடியம்.