பெற்றோல் இல்லை.. தங்கம் வேண்டாம்; Work from Home?இந்திய பிரதமர் அதிரடி
மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெற்றோலியப் பொருட்களைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நேற்று (10)தெலுங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரினால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறினார்.

மீண்டும் Work from Home முறையைச் செயல்படுத்த வேண்டும்
கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதைக் குறிப்பிட்ட அவர், பெற்றோலில் எத்தனால் கலப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முதலில் 100 சதவீத எல்பிஜி (LPG) இணைப்பை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது, தற்போது குறைந்த விலையில் குழாய் மூலம் எரிவாயு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
சிஎன்ஜி (CNG) அடிப்படையிலான அமைப்பையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இத்தகைய முயற்சிகளால், உலகில் நிலவும் பெரும் எரிசக்தி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருவதாக அவர் கூறினார்.
இன்றைய சூழலில் பெற்றோல், எரிவாயு, டீசல் போன்றவற்றை மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, போரின் பாதிப்புகளையும் குறைக்கும்,” என்று அவர் தெரிவித்தார். அதேபோல், போக்குவரத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்கள் மீண்டும் Work from Home முறையைச் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் பெற்றோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், அவற்றை வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்க, தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டு குறைக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார். முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தை தானமாக வழங்கினர்.
இன்று தானம் தேவையில்லை, ஆனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அவசியமின்றி தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்" என்றும் இதம்ன்போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.