தமிழர் பகுதியில் அரசியல்வாதி உட்பட 9 பேர் கைது
பழங்கால கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உட்பட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளம் காப்பகத்தில் உள்ள தொல்பொருள் இடமொன்றை தோண்டுவதற்கு குழுவொன்று முயற்சிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இரண்டு கற்களை எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற சொகுசு கார், லொறி, சிறிய கிரேன் லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், காரின் வடமாகாணசபை உறுப்பினர் என்ற அரச சின்னம் பொறிக்கப்பட்ட பலகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி சந்தேகநபர்கள் அப்பகுதியில் புதையல்களை தோண்டி தொல்லியல் கற்களை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபர்கள் சுமந்து சென்ற பழங்கால கல் தூண்கள் யானையின் கால் தடங்களை சித்தரிப்பதாகவும், கற்கள் ஐந்து முதல் ஆறு அடி வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது சந்தேகநபர்கள் வவுனியா, நொச்சியாகம, அநுராதபுரம் மற்றும் மஹரம்பகுளம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.