தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ; கண்காணிப்பு தீவிரம்
இந்தியா தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த ஆர்.எப்-5 கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரின் மாதிரிகள், மரபணு ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
பரிசோதனை முடிவுகளில், அந்த 20 மாதிரிகளிலும் ஆர்.எப்-5 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவிக்கையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றுக்காக 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024 ஆம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டவை என்றும், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே காணப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மரபணு ஆய்வில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் ஆர்.எப்-5 வகையைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வகை வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் சுகாதாரத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.