22 மணி நேர விமானப் பயணத்திற்கான புதிய அறிவியல் வசதிகள்
அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம், சிட்னியிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு உலகின் மிக நீண்ட நேரடி விமான சேவைகளை அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
சுமார் 20 முதல் 22 மணிநேரங்கள் வரை இடைநிறுத்தமின்றி நடைபெறவுள்ள இந்த நீண்ட தூரப் பயணங்களுக்காக, பயணிகளின் உடல் மற்றும் மனநல வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பயணிகள் எழுந்து நடமாடவும், உடலைத் தளர்த்திக் கொள்ளவும் உதவும் வகையில் சிறப்பு “Wellness Zone” அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி குளிர்ச்சியான சூழலை உணர்த்தும் ஒளியமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவுஸ்திரேலியாவின் இயற்கை காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் 14 விதமான ஒளியமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை விமானத்திற்குள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் போன்ற சூழலை உருவாக்கி, பயணிகளின் உடற்கடிகாரத்தை புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப மாற்ற உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பயணிகளின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், விமானம் புறப்பட்ட உடனேயே உணவு வழங்கும் வழக்கத்தை மாற்றி, அறிவியல் அடிப்படையில் திட்டமிடப்பட்ட நேரங்களில் உணவு வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Economy வகுப்பில் இருக்கைகளுக்கிடையேயான இடைவெளி 33 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் வசதிகளுடன் “Economy Plus” சேவையும் வழங்கப்படவுள்ளது.
விமானத்தின் எடைக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே பயணத்தில் 238 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைநிறுத்தம் இன்றி நேரடியாக இலக்கை அடையும் இந்த சேவைக்காக, வழக்கமான விமான கட்டணங்களை விட சுமார் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிட குவாண்டாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நேரத்தை மிச்சப்படுத்த விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளை இந்த சேவை கவர்ந்துள்ள போதிலும், கூடுதல் கட்டணம் நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.