பிரான்ஸ் அரசியல் சர்ச்சை ; புலம்பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் (France) நாட்டில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பரிந்துரைகள், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
பிரான்சின் செல்வாக்கு மிக்க அரசியல் வார இதழான Le Journal du Dimanche வெளியிட்டுள்ள விசேட நேர்காணலில், அந்நாட்டு நீதியமைச்சரான Gérald Darmanin பல முக்கிய குடியேற்றக் கட்டுப்பாட்டு யோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதன்படி, சட்டபூர்வ குடியேற்றத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

குடியேற்ற நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பதற்கும், உள்நாட்டு கட்டமைப்புகளை சீர்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், கட்டுமானம், உணவகங்கள் மற்றும் சுகாதாரத் துறைகள் போன்றவை பெருமளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பிரான்சில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் “Regroupement Familial” எனப்படும் குடும்ப இணைப்பு உரிமையை ரத்து செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மனித உரிமை மீறலாகும் என்றும், ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களுக்கு முரணானது என்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஆண்டுதோறும் பிரான்சில் அனுமதிக்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் வகையில் “ஒதுக்கீட்டு முறை” ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர்கள், இந்தக் கொள்கைகள் Marine Le Pen தலைமையிலான தீவிர வலதுசாரி அரசியல் அணிகளின் நீண்டகால கோரிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன எனக் குறிப்பிடுகின்றனர்.
வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் ஆளும் தரப்பு இந்த கடுமையான குடியேற்றக் கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து உருவான பிரான்ஸ், தற்போது தனது தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி நாட்டில் பரவலாக எழுந்துள்ளது.