விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் பெற புதிய வசதி
வாகனங்கள் இன்றி இயந்திரங்கள் மூலம் விவசாயம், கடற்றொழில் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடுவோருக்காகப் புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா கருத்துத் தெரிவிக்கையில்,
இதற்கான விசேட மென்பொருள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். உழவு இயந்திரம், படகுகள் மற்றும் ஏனைய இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.

பொதுமக்கள் தமது எரிபொருள் தேவை குறித்து கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்திற்குத் தெரியப்படுத்துவதன் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய QR குறியீடு அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்திற்கு அமையவே உருவாக்கப்படும். 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த முறைமை வகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும்.
இந்த புதிய நடைமுறை விரைவில் அமுலுக்கு வரும் என்றும், இதன் மூலம் இயந்திரங்கள் மூலம் தொழில் செய்வோரின் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.