உலகின் மிக அதிக விலையுயர்ந்த வீட்டுச் சந்தை ; இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்
உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் இதழின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசியா முழுவதும் அதிகரித்து வரும் வீட்டுவசதி நெருக்கடி குறித்து இந்த ஆய்வு விரிவாக விளக்கியுள்ளது.
வேகமான நகரமயமாக்கல் மற்றும் குறைந்த விலையிலான வீடுகளுக்கு நிலவும் கடும் பற்றாக்குறை ஆகியவையே இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மில்லியன் கணக்கான மக்கள் தரமற்ற வீடுகளில் வசித்து வரும் நிலையில், வீடுகளின் அதீத விலை உயர்வு மக்களின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதுடன், நகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சியையும் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வது பிராந்திய அளவில் பல நன்மைகளைத் தரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். முறையான வீட்டுவசதி உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.
இது மாணவர்களின் பாடசாலை வருகையை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் சொந்தமாக ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.