இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய முறைகள் அறிமுகம்
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 30ஆம் திகதி முதல் வாகனங்களின் இயக்கத்தில் 85 பாதுகாப்பு முன்மொழிவு முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
தனியார் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு முறைமைக்குள் கொண்டுவர வேண்டும்.
அந்த முறைமை மூலம் 55 வயதை அடையும் போது ஓய்வூதியம் பெறக்கூடிய ஒரு முறைமைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் நாம் அந்த இலக்கை அடைய முடியும் எனக்குறிப்பிட்டார்.