புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து தற்போது புதிய சுகாதார விதிமுறைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 15 முதல் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக ஒருவர் மாத்திரமே வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தினூடாக மாத்திரமே பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெற முடியும். நேரடியாக கூட்டங்கள் இடம்பெறுமாயின் 25 பேர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும். பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது. வீடுகளுக்குள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்.
பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட அனுமதிக்கப்படும். வெளியரங்க இருக்கை வசதி வரவேற்கப்படுகின்றது. உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெற முடியும் உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மட்டுமே அனுமதி.
ஆரம்ப பாடசாலைகள் 50 வீதமான மாணவர்களுடன் இயங்க முடியும். எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிகளை ஏற்ற முடியும். சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும்.
திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
குறித்த இடங்களில் அனுமதிக்ககூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணியவாறு வரிசையில் நிற்க வேண்டும்.
கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும். விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.
பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி. பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும்.
திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.
நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.