AI தொழில்நுட்பத்துடன் தேசிய மருத்துவமனையின் சேவையில் புதிய முன்னேற்றம்
இலங்கை தேசிய மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன MRI இயந்திரம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம் நோயாளி பராமரிப்பு சேவைகளுடன் இணைக்கப்பட்டது.
450 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியைக் கொண்ட இந்த அதிநவீன MRI ஸ்கேனர், தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவமனையில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த மூன்று MRI இயந்திரங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி செயலிழந்தமையால், நோயறிதல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஆகியோரின் ஆலோசனையின் பேரில், இந்த இயந்திரங்களின் செயற்பாட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் விளைவாக, ஏற்கனவே இருந்த மூன்று MRI இயந்திரங்களும் தற்போது சீர்செய்யப்பட்டு இயங்கி வருவதுடன், புதிதாக நிறுவப்பட்ட AI தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம் வைத்தியசாலையின் நோயறிதல் திறனை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரச சுகாதாரத் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்பட்டமை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.