இலங்கையில் தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த தகவல்
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மகன் தாயை தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த எஸ்.செல்லம்மா என்ற 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் என்றும், கைதுசெய்யப்பட்டவர் 41 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய மகனாவார்.
22 துண்டுகளாக உடைந்த விலா எலும்புகள்
இவர் தனது தாயை பலமாக தாக்கியதில் அவரது தலை பகுதியில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைந்துள்ளமை மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் தலையில் பலமாக தாக்கியதில் காயமடைந்த தந்தை தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி தனது மனைவியை தாக்கியதில் அவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது தாயுடன் வசித்து வந்த சந்தேக நபர் கடந்த 20 ஆம் திகதி அன்று தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் 16 வயதிலேயே கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவரை பற்றி எவரும் கவலைப்படவில்லை எனவும் கூறி தாயை தாக்கியுள்ளார்.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
அதன் பின்னர் அவர் தனிப்பட்ட வேலை ஒன்றிற்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று மதியம் 4 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வீட்டிற்குள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் தெரிவித்ததை அடுத்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் மரண விசாரணையில் உயிரிழந்தவர் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.