மன்னாரில் சட்டவிரோத தங்க கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த கடற்படையினர்!
மன்னாரில் சட்டவிரோத தங்கக் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்த நிலையில் 2 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 03-11-2023 திகதி மாலை மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக கடத்த முயன்ற சுமார் 02 கிலோ 150 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கடத்தல் கும்பலையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது, 05 சந்தேக நபர்கள், டிங்கி படகு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன இந்த சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை, கடல்வழி ஊடாக நிகழும் மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையானது இலங்கையை சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றது.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக வடமத்திய கட்டளையில் உள்ள கஜபா கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடை மறுத்துள்ளது.
மேலதிக சோதனையின் போது உள்ளூரில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 02 கிலோ 150 கிராம் தங்கம், 05 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டது.
கடற்கரையினை அண்மித்த பகுதியில் மேலதிக சோதனைகளை முன்னெடுத்த கடற்படையினர் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள், ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் தங்கம் மற்றும் பிற வாகனங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறையில் உள்ள சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.