இலங்கையில் சீரற்ற வானிலை பேரழிவு ; தற்போதைய நிலவரம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முதல் இன்று வரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் நேற்று 26 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக, பதுளை மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும் அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேரும் கேகாலை மாவட்டத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1729 குடும்பங்களைச் சேர்ந்த 5893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் 3 வீடுகள் முழுமையாகவும், 431 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேர் 12 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 137 குடும்பங்களைச் சேர்ந்த 477 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.